படியருகே கொடிமலராய்!
படியருகில் கொடிமலராய்
பாவையவள் நின்றிருக்க
கோவை இதழ்களிலே
குறுநகை அரும்பிடுதே!
நெஞ்சில் நிறைந்தவனின்
நினைவுகளில் உன்வாசம்!
தென்றல் தூதாகி
தெரிவிக்கும் உன்நேசம்!
கண்ணிரண்டின் மொழிகளிலே
எண்ணங்கள் எடுத்துரைக்க
இன்னுமொரு மொழிக்கிங்கே
இடமில்லை என்றுரைப்போ!
வில்லொத்த புருவத்தில்
வீழ்ந்ததென்ன வானவில்லும்!
கயலிரண்டு விழியாகி
கவர்ந்திழுக்கச் செய்கிறதே!
நெஞ்சத்தில் ஓவியமாய்
நிற்பவந்தான் யாரோ?
தஞ்சம் அடைந்தவளின்
தவிப்பினை அறியானோ?
பூந்தென்றல் காற்றே நீ
பூவையிவள் மனநிலையை
காவிய நாயகனின்
காதருகில் சொல்லாயோ!
-சே. பவித்ரா
இரண்டாம் கவிதைக்கான
இணைப்பு.இதோ: